மங்கோலிய பிரதமர் லுவ்ஸன்னம்ஸ்ரைன் ஒயுன்-எர்தென், தனது மகனின் புகைப்படங்களால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்தார்.

மங்கோலியா கடந்த சில வருடங்களாகவே, ஊழல் பிரச்சினைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024இல், ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ வெளியிட்ட ஊழல் குறைந்த 180 நாடுகளின் தரவரிசையில் மங்கோலியா 114ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்நாட்டுப் பிரதமரான லுவ்ஸன்னம் ஸ்ரைனின் மகனின் ஆடம்பர வாழ்க்கையை காட்டும் வகையிலான சில புகைப்படங்கள், சமூக வலைதளத்தில் பரவின. இது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உலான்பாட்டரில் உள்ள சுக்பாதர் சதுக்கத்தில் கடந்த சில வாரங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம், ஒயுன்-எர்தெனின் குடும்பத்தின் சொத்துக்களையும் வருமானங்களையும் குறித்து விசாரணை மேற்கொண்டது.
இதைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்தே, அவர் பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “போர்கள் மற்றும் வரி சுமைகள் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் நாட்டிற்காக சேவை செய்தேன் என்பது எனக்குப் பெருமை. இருப்பினும், என் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டானது, ஒரு திட்டமிட்ட அவதூறான பிரசாரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை 30 நாட்களுக்கு இடைக்கால பிரதமராக ஒயுன்-எர்தென் பதவியில் தொடர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here