மே மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்குரிய விருதுகளைப் பெறும் ஆடவர் மற்றும் மகளிர் அணி வீரர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதற்கமைய, மே மாதத்துக்குரிய சிறந்த ஆடவர் அணியின் வீரருக்கான விருதை ஐக்கிய அரபு இராச்சிய அணித் தலைவர் மொஹமட் வசீம் வென்றுள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான வரலாற்றுத் தொடர் வெற்றியை நோக்கி அணியை வழிநடத்தியதன் விளைவாக இரண்டாவது முறையாகவும் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை மொஹமட் வசீம் பெற்றிருந்தார்.
மே மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதுக்காக அவருடன், ஸ்கொட்லாந்தின் பிரண்டன் மெக்முல்லன் (Brandon McMullen) மற்றும் அமெரிக்காவின் மிலிந்த் குமார் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மே மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் சகலதுறை வீராங்கனை குளோய் ட்ரையன் (Chloe Tryon) வென்றுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடரில் தமது அபார ஆற்றலை வெளிப்படுத்தியமைக்காக அவர் இந்த விருதைப் பெறுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
குளோய் ட்ரையனுடன், மே மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவி ஹேலி மேத்யூஸ் மற்றும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here