ஆர்.சி.பி அணியின் வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் ஆர்.சி.பி அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அணியின் உரிமையாளரான டயாஜியோ பி.எல்.சி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) ஐபிஎல் உரிமையை விற்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயாஜியோ நிர்வாகம் ஆர்.சி.பி அணியின் முழு அல்லது பகுதி உரிமையை விற்க திட்டமிடுவதாகவும், இதற்கு 2 பில்லியன் டொலர் வரையில் மதிப்பீட்டை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
