குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவைச் சேர்ந்த பிரதீப் ஜோஷி கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி வைத்தியர் கோனி வியாஸ், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். ஏனெனில் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் லண்டனுக்கு குடிபெயர்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். அந்தவகையில் நேற்று குடும்பத்துடன் லண்டனுக்கு பயணமாகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய விமான விபத்தில் அவர்கள் அனைவரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கணவன் மனைவி அழகான மூன்று குழந்தைகள் இறுதியாக விமானத்தில் எடுத்த செல்பி அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த குடும்பத்தினரின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் எனும் இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள். இதுவரை 41 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here