வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை திரும்புவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் மீள மலேரியா தொற்று நாட்டினுள் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு நோய்த்தொற்றுடன் வருகைத்தந்த சுமார் 15 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டு திட்டத்தின் விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன குறிப்பிட்டார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மலேரியா இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்கப்பட்ட நுளம்புகள் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும். எனினும் வருடாந்தம் பல மலேரியா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத்தந்தவர்களே இவ்வாறு நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன, நாட்டில் நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டிருப்பினும் நோய்க்காவியான நுளம்புகள் பரவியுள்ளமையால் நோயாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு நோய் பரவவாய்ப்புள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்புவோர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலம் மீள மலேரியா தொற்று பரவலாம். இந்திய மற்றும் ஆபிரிக்கா போன்ற மலேரியா தொற்று பரவியுள்ள நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மலேரியா தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் பலர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வகைத்தந்தவர்களாவர். நாட்டில் வருடாந்தம் 50 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் கடந்த வருடம் மாத்திரம் 38 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் 99 சதவீதமானோர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற ஆண்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 15 மலேரியா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் பதிவாகிய நோயாளர்களில் பலர் சட்டவிரோதமான முறையில் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றவர்கள் என தெரியவந்துள்ளது. ஆகையால் வெளிநாடு செல்வோர் மலேரியா நோய்க்கான தடுப்பூசியை பெறுவது அவசியம் நாடளாவிய ரீதியில் உள்ள மலேரியா கட்டுப்பாட்டு நிலையங்களில் இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here