இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 5 போர்களை நிறுத்தியுள்ளேன் – மீண்டும் தம்பட்டம் அடித்த டிரம்ப்

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய படைகள் தாக்கி அழித்தது. இந்த போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அவர் இதே கருத்தை கூறி உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “உலகளவில் 5 போர்களை நான் நிறுத்தி உள்ளேன்.மே மாதம் 10-ந்தேதி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உடனடியாக போரை நிறுத்த ஒப்புக்கொண்டது. உலகளவில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரியும் நாங்கள் மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். இதில் 31 ஆண்டுகளாக நீடித்து வரும் காங்கோ-ருவாண்டோ நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். நான் நிறைய போர்களை தீர்த்து வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் சமீபத்தில்கூறும் போது உலகெங்கிலும் பல மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ரஷியா, காங்கோ ஜனநாயக குடியரசு-ருவாண்டோ, இந்தியா-பாகிஸ்தான், செர்பியா-கொசோவா, எகிப்து-எத்தியோப்பியா நாடுகளின் மோதலை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles