ஜப்பானியப் பொருள்கள் மீது விரிவிதிக்க உத்தரவிடும் அமெரிக்க அதிபர் ஆணையில் மாற்றம் செய்ய அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய இறக்குமதிகள் மீது அமெரிக்கா 15% வரிவிதிக்க சென்ற மாதம் இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அந்த வரி, மாட்டிறைச்சி போன்ற அதிக கூடுதல் வரிக்கு உட்படுத்தப்படும் பொருள்கள் மீதும் விதிக்கப்படமால் இருக்க ஜப்பான் தரப்பில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துபவரும் அந்நாட்டின் பொருளியலுக்குப் புத்துயிர் அளிப்பதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ரியோசெய் அக்காஸாவா, அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹவர்ட் லுட்னிக் மற்றும் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி கையெழுத்தான அமெரிக்க அதிபர் ஆணையில் மாற்றம் செய்ய அமெரிக்கத் தரப்பு ஒப்புக்கொண்டதாக திரு அக்காஸாவா தெரிவித்துள்ளார். அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கு வழிவகுக்கும் அம்சம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜப்பானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் அந்த அம்சம் இடம்பெறவில்லை என்று திரு அக்காஸாவா குறிப்பிட்டார்.

மேலும், வேறு உத்தரவு ஆணையில் ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் வாகனங்கள், வாகனப் பொருள்கள் ஆகியவற்றின் மீது அமெரிக்கா 27.5% வரிவிதித்திருந்தது. அதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 15% குறைப்பார் என்று லுட்னிக், பெசன்ட் இருவரும் தெரிவித்தனர். அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்க டிரம்ப் அவ்வாறு செய்வார் என்று இருவரும் விவரித்தனர்.

அக்காஸாவா, அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.“உண்மையைச் சொன்னால் கடைசியாக மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்துக்கு இவ்வளவு சிறிது காலம் கழித்து அங்கு மீண்டும் பயணம் மேற்கொள்வேன் என நான் நினைக்கவில்லை,” என்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒன்பது முறை வா‌ஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அக்காஸாவா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here