பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தொகுக்கப்பட்ட படங்கள் மற்றும் போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்கள் சிலர் இலங்கை பொலிஸ் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய கூட்டு நடவடிக்கையில் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, அவர்களை சுற்றிவளைப்பதற்கு உதவிகளை வழங்கிய இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகள் குழுவும் இலங்கைக்கு வந்தனர்.
இதன்போது பொலிஸ்மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று, இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தமது நன்றியை தெரிவித்திருந்தனர்.
அதனுடன் தொடர்புடையதாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் போலி புகைப்படம் மற்றும் அவதூறு மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில், அமைச்சரின் பிரத்தியேக செயலாளரினால் 31.08.2025 அன்று பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
