மோடியை எனக்கு தெரியும்.. அவர் அதை செய்யவே மாட்டார் – ரஷிய அதிபர் புதின்

ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை அதிபர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஷியாவின் சோச்சி (Sochi) நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் மன்ற (Valdai Forum) நிகழ்வில் அந்நாட்டு அதிபர் புதின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.

தலைகுனிவை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்

அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவில் இருந்து எண்ணை இறக்குமதியால் சமப்படுத்தப்படும்.

இந்தியா இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும்.

ரஷியாவின் வர்த்தக பங்காளிகளுக்கு அதிகவரிகள் விதிக்கப்படுவது உலகளாவிய விலைகளை உயர்த்தும். இத்தகைய நடவடிக்ககைள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும் நேர்மையான பொருளாதார வளரர்ச்சியை தக்க வைத்து கொள்வதே ரஷியாவின் நோக்கமாகும்.

உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம்” என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷிய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாக புதின் சுட்டிக் காட்டினார்.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம் எனவும் புதின் தெரிவித்தார்.

“அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்.” என்று புதின் மேலும் கூறினார்.

ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த கருத்து வந்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles