ஜப்பானின் போர்க்குற்றங்களுக்கு டோமிச்சி முர்யமா மன்னிப்பு கோரினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா, உடல்நலக்குறைவு காரணமாக அவரது சொந்த ஊரான ஒய்டா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முர்யமா இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 101.

ஜப்பான் சோஷியாலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரான டோமிச்சி முர்யமா, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முர்யமா வெளியிட்ட மன்னிப்பு அறிக்கை மிகவும் பிரபலமானதாகும்.

கடந்த 1945-ம் ஆண்டு, ஜப்பான் அரசு நிபந்தனையின்றி சரணடைந்த பின்னர் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அந்த தினத்தின் 50-வது ஆண்டு நினைவு நாளையொட்டி முர்யமா ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில், போர்க்காலங்களில் ஜப்பான் ராணுவம் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு மன்னிப்பு கோருவதாக அவர் கூறினார்.

அவரை தொடர்ந்து ஜப்பான் பிரதமராக பதவி வகித்த அனைவரும், ஜப்பானின் போர்க்குற்றங்களுக்காக மன்னிப்பு கோரினர். ஆனால் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2013-ம் ஆண்டிற்கு பிறகு மன்னிப்பு கோருவதை நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here