அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை மருத்துவர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தார்.

கல்லூரியில் பயின்று வரும் ரோசன்பெர்க் Direct Action Everywhere என்ற விலகுங்கள் நல குழுவில் செயல்பட்டு வருகிறார்.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நள்ளிரவில், ரோசன்பெர்க் மற்றும் அவரது குழுவினர், வட கலிபோர்னியாவில் உள்ள இறைச்சி ஆலைக்குள் தொழிலாளர்கள் போல் வேடமிட்டு நுழைந்தனர். அங்கிருந்த ஒரு லாரியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளில் இருந்து நான்கு கோழிகளை எடுத்துச் சென்றனர். குழுவினர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.

இதன் பின் அவர் மீதும் அவரது குழுவினர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், தான் விலங்குகளைத் திருடவில்லை என்றும், அவற்றை கொடுமையான சூழ்நிலையிலிருந்து மீட்டதாகவும் ரோசன்பெர்க் வாதிட்டார்.

இந்நிலையில் அத்துமீறி நுழைதல், வாகனத்தை சேதப்படுத்த முயற்சி செய்தல், மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த குற்றங்களுக்காக ரோசன்பெர்க்குக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

ரோசன்பெர்க்கின் வழக்கறிஞர்கள், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here