ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் தனது அத்தையுடன் சேர்ந்து 8 பேரைத் திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்த விவரம்: இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்த வாணி (19) என்ற பெண்ணின் பெற்றோர் அவர் சிறு வயதிலேயே மறைந்ததால், அவரது அத்தை சந்தியா என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சமீபத்தில் வாணிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கும் சோம்பேட்டிலுள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு புதுமாப்பிள்ளை தனது மனைவியை ரயிலில் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
விஜயநகரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, கழிவறை செல்வதாகக் கூறிச் சென்ற வாணி மீண்டும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த கணவர் வீட்டார், அவரைத் தேடி இச்சாபுரத்திலுள்ள அவரது அத்தை வீட்டிற்குச் சென்றனர். அங்கு வாணி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அம்பலமான மோசடி: அங்கு நடந்த விசாரணையில், வாணி பணத்திற்காக மட்டுமே இந்தத் திருமணத்தைச் செய்தது அம்பலமானது. மணமகன் வீட்டார் தாங்கள் கொடுத்த ₹1.5 லட்சம் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, மறுநாள் தருவதாகக் கூறி வாணியும் அவரது அத்தையும் அவர்களைச் சமாதானப்படுத்தினர். ஆனால், அன்றிரவே இருவரும் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகினர்.
போலீஸ் விசாரணை: பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அத்தை சந்தியாவின் தூண்டுதலின் பேரில், வாணி பல ஆண்களைத் திருமணம் செய்து, “எதிர் வரதட்சணை” என்ற பெயரில் பணம் வாங்கி ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இதுவரை 8 பேரை இவ்வாறு அவர் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
வாணி இதற்கு முன்பு மைனராக இருந்ததால் புகார்கள் அளிக்கப்படவில்லை. தற்போது அவர் மேஜர் என்பதால், பாதிக்கப்பட்ட நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகியோரின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அத்தை மற்றும் மருமகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
#MarriageScam #CrimeNews #ViralNews #FraudAlert #AndhraPradeshCrime #ShockingNews #MarriageFraud #Wanted
The 19-Year-Old “Serial Bride”: Teen Marries 8 Men and Vanishes with Gold and Cash!
