“ஆமாம்.. அதிமுக அடிமை கட்சி தான்!” – ஸ்டாலினுக்கு அண்ணாமலை கொடுத்த நச்சென்ற பதிலடி.

அதிமுக ஒரு அடிமை கட்சி என்று ஸ்டாலின் கூறி வரும் நிலையில் இதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஒரு அடிமை கட்சி தான் என்றும் ஆனால் மக்களுக்கு அடிமை கட்சி என பதில் கூறியுள்ளார். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக நிதியினை தமிழகத்திற்கு தான் மத்திய அரசு கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கோவையில் நடந்த பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அண்ணாமலை இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “அண்ணாமலையும், நானும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனி தான் ஆரம்பம்.. அமித்ஷா என்ன நினைத்தாரோ.. பிரதமர் மோடி என்ன நினைத்து தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியை அமைத்தாரோ அது நடப்பதற்கான ஆட்டம் இனி தான் ஆரம்பம்” என்று கூறினார்.

அண்ணாமலை பேசியதாவது:- திமுக மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார், அதிமுக அடிமை கட்சி என்று. பாஜகவைப் பொறுத்தவரை சங்கி கட்சி என்று. இருவருமே டெல்லிக்கு அடிமையாக இருப்பதற்காக கூட்டணியை உருவாக்கி இருக்காங்க என்று சொல்கிறார். இதனை தற்குறி உதயநிதி பேசியிருந்தால் மன்னித்து விட்டிருக்கலாம்.

ஆனால் தமிழகத்தின் முதல்வராக இருப்பவர் இப்படி பேசியிருப்பதால், அவருக்கு பதில் சொல்லாமல் இருந்தால் நல்லா இருக்காது. திமுக ஆட்சியில் இருந்ததை விட அதிக ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அதிமுகவும் அதன் தலைவர்களும். ஆமாம்.. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை கட்சி தான்.. ஆனால் யாருக்கு அடிமை என்றால் மக்களுக்கு அடிமை.

மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்கின்ற அடிமை கட்சி. பாஜகவும் அடிமை கட்சி தான்.. யாருக்கு என்றால் தமிழ்நாடு மக்களுக்கு நாங்கள் அடிமை. மக்களை எஜமானர்களாக நினைத்து அவர்களுக்கு சேவை செய்யக்கூடிய கூட்டணியை பார்த்து நீங்கள் அடிமை என்று சொன்னால், பெருமையாக அதனை நெஞ்சில் அணிந்துகொண்டு மக்களுக்காக பணியாற்றுவோம். களத்தில் நிற்போம். ஆட்சி மாற்றம் வரும்.

முதல்வர் அதோடு நிற்கவில்லை.. இப்போது ஒரு பெரிய பொய்யை கிராம மக்கள் மத்தியில் விதைத்து கொண்டு இருக்கிறார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு நிறுத்தப்போவதாக சொல்லி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் இப்போது வரை அதை செய்யவில்லை. அதில் ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டு இருக்கிறீர்களா? தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னும் நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, இப்போது பொய் பரப்பி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே 100 நாள் வேலை திட்டத்துக்கு அதிக பணத்தை தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தை விட, மகாராஷ்டிராவை விட, பாஜக ஆளும் மாநிலங்களை விட 100 நாள் வேலை திட்டத்திற்கு அதிக நிதி தமிழக மக்களுக்கு தான் மத்திய அரசு கொடுத்து இருக்கிறது.

நம்முடைய ஆட்சி இங்கே வந்தால் தான்.. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் இதை செய்ய முடியும்.. என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரும் போது 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாறும். எங்களால் தான் இதை செய்ய முடியும். அவங்க செய்ய மாட்டாங்க.. இவ்வாறு அவர் கூறினார்.

 

#Annamalai #ADMK #BJP #EPS #Stalin #TamilNaduPolitics #TNNews #NDAAlliance #MNREGA #Coimbatore #PoliticalBattle

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles