யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , ‘கந்தரோடை விகாரை’ என நட்டப்பட்டிருந்த பெயர் பலகை இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் ‘கந்தரோடை விகாரை’ என திசை காட்டும் பெயர் பலகை நடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தை, ‘தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை அடுத்து வீதிகளில் ‘கந்தரோடை விகாரை’ என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
