சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ  பயணமாக இன்று  திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.

கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளிவிவகார அமைச்சர்கள் ஆண்டின் முதல் பயணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொள்கின்றனர். இதன்படி, எத்தியோப்பியா, சோமாலியா, தன்சானியா, லெசோதோ நாடுகளுக்கு சென்றுள்ள வோங் யீ அங்கிருந்து நேராக இலங்கை வருகிறார்.

அவரின் இந்தப் பயணத்தில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் மறுசீரமைப்புக்கு விசேட நிதியுதவி திட்டம் ஒன்றையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கை விதித்துள்ள தடையால் புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் அந்த நாடு பின்னடிப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பிலும் புதிய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

வோங் யீ நாட்டில் தங்கியிருக்கும் இந்த இரு நாட்களிலும் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே. வி. பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட பல பிரமுகர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழுவினர் ஜே. வி. பி. தலைமையகத்துக்குச் சென்று பேச்சுகளை நடத்தினர். புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே வோங் யீயின் வருகையின் பிரதான நோக்கம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here