இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம், தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் (Tamil Nadu State Women’s Netball Team) பயிற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எல்லைகளைக் கடந்து, ஓர் இலங்கையராகத் தென்னிந்திய மாநில அணியொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இலங்கை விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாகும்.
கிரிஜா அருள்பிரகாசம், அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் ஆற்றிய அபார சாதனைகளுக்காக நான்கு தங்கப் பதக்கங்களையும் விருதுகளையும் வென்று சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது:
பேராசிரியர் அழகையா துரைராஜா தங்கப் பதக்கம், சகாதேவன் நிலக்சன் நினைவு விருது மற்றும் தங்கப் பதக்கம் , ‘ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை’ நினைவுத் தங்கப் பதக்கம் என்பவற்றைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், ஊடகக் கற்கைகள் துறையில் (Bachelor of Arts Hons) முதலாம் வகுப்பு கௌரவத்துடன் சித்தியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத் துறையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ரீதியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்த கிரிஜா, தற்போது தனது பயிற்சியாளர் பணியின் மூலம் தமிழகத்தின் விளையாட்டு அரங்கில் தடம் பதித்துள்ளார். மன்னாரிலிருந்து புறப்பட்டு, கல்வியிலும் விளையாட்டிலும் ஒரே நேரத்தில் சிகரம் தொட்ட இவரது வெற்றி, எதிர்கால இளம் வீராங்கனைகளுக்கு ஒரு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
