ராமராஜன் நடித்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனகா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு உள்பட பல்வேறு படங்களில் நடித்த கனகா, தனது தாயாரும் நடிகையுமான தேவிகா மறைவுக்குப் பிறகு தனிமையில் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் அவர் நடிகை குட்டி பத்மினியை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. சமீபத்தில் அவர் தந்தையும் காலமானார். இந்நிலையில் அவர் தனது முதல் பட ஹீரோ ராமராஜனை சந்தித்துப் பேசியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.
இதுபற்றி ராமராஜனிடம் கேட்டபோது, “கனகாவைப் பார்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அவரை தொடர்பு கொண்டு உங்களைச் சந்திக்க வேண்டும்” என கேட்டேன். நானே வருகிறேன் என கூறி, என் வீட்டுக்கு வந்தார்.
நான் இயக்கிய ‘மருதாணி’ படத்தில் அவரைத்தான் அறிமுகப்படுத்த நினைத்து அவர் அம்மாவிடம் பேசினேன். ‘அவள் சின்னப் பெண்ணாக இருக்கிறாள், இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்’ என்று தேவிகா மறுத்துவிட்டார். பிறகு அவர் எனக்கு ஜோடியாகவே நடித்தார்.
இந்த விஷயங்களை அவரிடம் இப்போது சொன்னேன். அவர், ‘அப்போது நீங்கள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்ததை உள்ளே நின்று கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்றார்.
பிறகு பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அவருடன் நான் நடித்த கரகாட்டக்காரன், தங்கமான ராசா படங்கள் வெற்றி பெற்றன. அவர், தான் குண்டாகிவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார்.
‘அது ஒன்றுமில்லை, மனசுதான் முக்கியம்’ என்று சொன்னேன். என் வீட்டில் இருவரும் மதிய உணவு சாப்பிட்டோம். பழைய விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

















