டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ‘சூட்டி மல்லி’ உட்பட மூவர் இன்று வெள்ளிக்கிழமை இலங்கை பொலிஸ் குழுவினரால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் இன்று அதிகாலை 05.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான ‘கொன்ட ரன்ஜித்’ என்பவரின் சகாவான 30 வயதுடைய ‘சூட்டி மல்லி’ என்பவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “புன்சா” என்பவரின் 52 வயதுடைய சகாவும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரையும் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
