அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்திலிருந்து இன்று (22) உத்தியோகபூர்வமாக விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் உலகளாவிய சுகாதாரத்துக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஆம் ஆண்டு பதவியேற்ற முதல் நாளிலேயே நிர்வாக உத்தரவு மூலம் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு முன் ஒரு ஆண்டு முன் அறிவிப்பு வழங்கி, நிலுவையில் உள்ள 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

எனினும், அந்தத் தொகை இன்னும் செலுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை, உலக சுகாதார அமைப்பின் செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தநிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை “மிகப்பெரிய இழப்பு” என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கி வந்த 18 சதவீத நிதிப்பங்களிப்பு நிறுத்தப்பட்டதால், தற்போது அந்த நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

நிவாரணப் பணிகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பு, தனது நிர்வாகக் குழுவை பாதியாகக் குறைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கால்வாசிப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here