காணாமல் போனோர் பணிமனைக்கு கிடைத்த 11 ஆயிரம் முறைப்பாடுகளும் 2 ஆண்டுகளில் விசாரிக்கப்படும்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காணாமல் போனோர் பணிமனைக்கு 11 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவை தொடர்பான விசாரணைகள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் – இவ்வாறு தெரிவித்துள்ளார் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்சன நாணயக்கார.

நேற்றைய தினம் வவுனியாவில் காணாமல் போனோர் பணிமனையின் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது. இதன் முடிவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் பணிமனை பெறும் முறைப்பாடுகளை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முக்கிய காரணம், இந்தப் பணிமனையிலுள்ள பிரச்னை அல்ல, அப்போதைய அரசியல் சூழ்நிலை. காணாமல் போனோர் பணிமனையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் 65 அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தப் பணிமனையின் விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க 37.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 11 ஆயிரம் முறைப்பாடுகள் இதுவரை இந்த பணிமனைக்கு கிடைத்துள்ளன. 5 ஆயிரம் முறைப்பாடுகளின் விசாரணைகள் இந்த ஆண்டு நிறைவடையும். அனைத்து முறைப்பாடுகளின் விசாரணைகளும் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முறைப்பாடுகளை விசாரிப்பதன் முதன்மை நோக்கம் காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் உயிருக்கு நீதியை விரும்புகிறார்கள். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. அவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வலிகளைத் தவிர்த்து, இந்த மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கேள்வி – புதைகுழிகள் ஆய்வு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? இவை தொடர்பில் டி.என்.ஏ சோதனைகள் குறித்தும் விவாதங்கள் உள்ளன. இது குறித்த கருத்து என்ன?

பதில் – இந்தப் புதைகுழிகள் ஆய்வு தொடர்பாக நாங்கள் சிறப்பு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறோம். தேவையான ஏற்பாடுகளை முறையாக வழங்கவும் இந்த ஆய்வுகளை வெளிப்படையாக நடத்தவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிநாடுகளிலிருந்து அறிவியல் உதவிகளை பெற்று தேவையான விசாரணைகளை நடத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்கள் தங்கள் அன்புக்கு உரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். விசாரணைகளின்போது தவறு செய்தவர்களைத் தெரிய வந்தால், அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் டி. என். ஏ. மற்றும் பிற தொழில்நுட்ப ஆய்வகங்களை பெறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேள்வி – காணாமல் போனோர் அலுவலகத்துக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக இந்த பயிற்சி பட்டறையில் ஒரு தரவுத்தள அமைப்பு விவாதிக்கப்பட்டது. காணாமல் போன ஒருவர் தொடர்பாக 2 அல்லது 3 முறைப்பாடுகள் வந்துள்ளன என்று கூறப்படுகிறதே?

பதில் – இந்தப் பணிமனைக்கு ஒரு தரவுத்தள அமைப்பு அவசியம். இந்தப் பணிமனை 2018இல் நிறுவப்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பாக பல ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே, ஒரு தரவுத்தள அமைப்பு தேவை.

கேள்வி – இந்த விசாரணைகள் வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக மட்டுமே நடத்தப்படுகின்றனவா? தெற்கில் காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றனவா?

பதில் – வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்கள் குறித்து மட்டுமல்ல. தெற்கிலும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பயிற்சிகளுடன் தெற்கிலும் விசாரணைக் குழுக்கள் நிறுவப்படுகின்றன. 1988-89 இல் நடந்த காணாமல் போனவர்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் ஒரு பிரிவு இருக்கக்கூடாது. விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

கேள்வி – தற்போதைய சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கதைகள் பரவி வருகின்றன. நீதி அமைச்சர் என்ற முறையில் உங்கள் கருத்து என்ன?

பதில் – தற்போதைய சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமூக ஊடகங்களில் எந்த வகையான அறிக்கைகள் வெளியிடப்பட்டாலும் சட்டமா அதிபரை பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. சட்டமா அதிபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகக் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. அவர் நீக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. சட்டமா அதிபரை மட்டுமல்ல, நீதி அமைச்சரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சில சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இதைத்தான் நான் சொல்ல வேண்டும். நீதி அமைச்சர் அல்லது வேறு யாரையாவது பற்றி முறைப்பாடுகள் இருந்தால், இந்த நாட்டில் உள்ள சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். நீங்கள் முறைப்பாடு செய்யலாம். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் விசயங்களுடன் அரசாங்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. சட்டமா அதிபரை நீக்குவது அல்லது பதவி நீக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் எந்த விவாதமும் இல்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles