கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின் என தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் கொழும்பில் தொழில் செய்து வருகிறார் எனவும், சம்பவதினம் தலைமுடி வெட்ட சிகை அலங்கரிப்பு நிலையம் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று இரவு சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், படுகாயமடைந்த ஏனையவர்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
T-56 ரக துப்பாக்கி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
