
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை பிற்பகல் இலங்கைக்கு வருகைதந்தனர்.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றார்.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையும் அதன் தாக்கத்தையும் நேரடியாகப் பார்வையிடும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இந்நாட்டிற்கு வருகை தந்திருப்பதுடன், நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் கம்பளை பகுதிக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.
அதன் பின்னர், கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்துக்குப் பிறகு இலங்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்படும்.
