இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் Matsuo Takehiko, ஜப்பான் -இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் தலைவர் Fumihiko Kobayashi ஆகியோர் தலைமையிலான ஜப்பானிய தொழில்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று ஜனாதிபதி அநுர குமாரவைச் சந்தித்துக் கலந்துரையாடியது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதி-தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இந்தியா உட்பட ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்ட உற்பத்தித் தொழில்களுக்கான முதலீடுகளை இலங்கை நோக்கி ஈர்ப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல், மோசடி மற்றும் ஊழல் அற்ற நிறுவனக் கட்டமைப்பை ஏற்படுத்தல் போன்ற பரந்த சமூக மாற்றத்தை நோக்கி நாடு நகர்ந்து வருவதாக சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது இலங்கையில் இல்லை என்றும், எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை விரைவாக செயல்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
