Wednesday, February 18, 2026
HomeMain Newsஇந்திய விஜயத்தின்போது அதிகாரப் பகிர்வு பற்றி பேசப்படவே இல்லை! மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வலியுறுத்தவும்...

இந்திய விஜயத்தின்போது அதிகாரப் பகிர்வு பற்றி பேசப்படவே இல்லை! மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வலியுறுத்தவும் இல்லை

அண்மைய இந்திய விஜயத்தின் போது அதிகாரப் பகிர்வு அல்லது மாகாண சபைத் தேர்தல் குறித்து இந்தியத் தரப்புடன் எவ்விதப் பேச்சுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கை தரப்பினருடனான சந்திப்புகளின் போது அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆம் திருத்தம் குறித்து இந்தியத் தரப்பினர் வலியுறுத்துவது வழக்கம்.

இது குறித்து ரில்வின் சில்வாவிடம் வினவப்பட்ட போது அவர் கூறியதாவது:

‘இந்திய வெளிவிவகார அமைச்சர், குஜராத் மற்றும் கேரள மாநில முதல மைச்சர்கள் ஆகியோரை நாம் சந்தித்தோம். இந்தச் சந்திப்புகளின் போது மாகாண சபை உள்ளிட்ட அரசியல் காரணங்கள் குறித்துப் பேசப்படவில்லை.

இந்தியத் தரப்பிலிருந்து இது தொடர்பாக எவ்வித நினைவூட்டல்களும் செய்யப்படவில்லை. எமது கலந்துரையாடல்கள் அனைத்தும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தே அமைந்திருந்தன.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தமது கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தற்போதைய சூழலில் நாட்டின் பொருளாதார முன்னேற்றமே முதன்மையானது என்பதால், அதற்கான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளவர்களே, இந்த விஜயத்தின் பின்னணியில் இரகசிய ஒப்பந்தங்கள் இருப்பதாகக் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறான இரகசிய உடன்படிக்கைகள் எதுவுமில்லை. இந்த விஜயம் முழுக்க முழுக்கப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை நோக்கமாகக் கொண்டது.’ – என்று ரில்வின் சில்வா மேலும் விளக்கமளித்தார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular