தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தில் பௌத்த சாசன அமைச்சு பாரபட்சமான
முறையில் செயற்படுகின்றது என்றுபாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
‘திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட எமது காணிகளை எம்மிடம் மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால், எமக்கு அழைப்பு விடுக்காமல் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர்.
எம்மிடம் இருந்து ஆவணங்களைப் பெற்றுள்ளனர். அந்தக் காணிகள் எம்முடையவை என்பதற்கு நாங்கள் அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளோம். ஆனால், எமது கருத்துக்களைத் தெரிவிக்க இடம் வழங்கப்படாமல் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
எம்மை அழைக்காமல், எமது காணிகளை ஆக்கிரமித்த விகாராதிபதியை அழைத்துக் கலந்துரையாடல் நடத்துவது, அந்த ஆக்கிரமிப்புக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.’ – என்றனர்.
















