ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், அதன் ஓர் அங்கமாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த விசேட கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைகளோ அல்லது விவாதங்களோ இடம்பெறாத நிலையில், பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் அரச சார்பற்ற அமைப்பினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 60ஆவது கூட்டத்தொடரின்போது, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
இதன்படி, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் (63ஆவது கூட்டத்தொடர்) சமர்ப்பிக்கப்படும். அத்துடன், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் (66ஆவது கூட்டத்தொடர்) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாகவே, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தற்போதைய 61ஆவது கூட்டத்தொடரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விவாதங்கள் உள்வாங்கப்படவில்லை.
உத்தியோகபூர்வ விவாதங்கள் இல்லாவிட்டாலும், ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான குழுவினர் இக்கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.
ஏனைய நாடுகளின் விவகாரங்கள் குறித்த பொது விவாதங்களின்போது, அவர்கள் இலங்கை சார்பில் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் தற்போதைய மனித உரிமைச் சூழல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















