

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் ‘அரச மதமும் தனியார் காணியும்’ எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் இன்று வெள்ளிக்கிழமை, பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இக்கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ம.திருவரங்கன், மூத்த சட்டத்தரணி கலாநிதி. கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் சபையின் தவிசாளர் திரு. சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த திருமதி. சா.சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் கலாநிதி. தி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















