மட்டக்களப்பு சின்னப்புல்லுமலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சின்னப்புல்லு மலை பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு தங்கியிருந்த வேளை யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இங்கு கடந்த ஒரு மாதகாலமாகத் தங்கியிருந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவர் தங்கியிருந்த வயல் வாடியைச்சுற்றி யானை வேலி போடப்பட்டுள்ளதனால் இங்கு காட்டு யானைகள் உள்நுழைவதில்லை. ஆயினும் சம்பவதினம் இரவு இவர் யானை வேலிக்கான மின் விநியோகத்தை வழங்க மறந்து உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டு யானை இவர் தங்கியிருந்த வயல் வாடியை உடைத்த வேளையில் யானையின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஓடியுள்ளார். எனினும் அந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

