குருக்கள்மட மனித புதைகுழி முதல் கட்ட அகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குருக்கள்மடம் மனிதப் புதைகுழி முதலாம் கட்ட அகழ்வுப்பணிகள் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இவ்வழக்கில் ஆஜரான சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவரகள் தொடர்பான வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பாரியதொரு திருப்புமுனையையும் ஒரு முன்னேற்றத்தையும் நாங்கள் அடைந்திருக்கிறோம்.

இந்த வழக்கு, விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது ஏற்கனவே இந்த குறிப்பிட்ட அகழ்வுப்பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டிருந்ததோடு, காலநிலையும் ஒரு தடையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது காலநிலை சீராக உள்ளதால் அகழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதற்கான பணத்தை செலவழிக்கின்ற அதிகாரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளையை நீதவான் பிறப்பித்திருக்கிறார்.

இது தொடர்பான சட்ட வைத்திய அதிகாரிகள், அதற்குரிய ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவருடைய கலந்துரையாடலின் பிற்பாடு இந்த திகதி தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 30ஆம் திகதி முதற்கட்ட அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்கிற செய்தியினை நாம் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

30ஆம் திகதி குருக்கள்மடத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறிவதற்கான நடவடிக்கையாக, இந்த புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக, களுவாஞ்சிக்குடியின் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்ததன் பின்னர் மார்ச் 30ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக குரலற்றவர்களின் குரல்கள் இயக்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

முடிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை, நீதிமன்றங்கள் நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது என சட்டத்தரணி றாஸீ முஹம்மத் முஹம்மத் இதன்போது தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles