யாழ்ப்பாணம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானது.
இதன்போது கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன், 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய எட்வேட் உதயகுமாரி என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த விபத்தில் நாவற்குழி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய ஸ்டீபன் பிரான்சிஸ், குருநகர், பழைய பூங்கா சாலையை சேர்ந்த 80 வயதுடைய எம். ஜோசப் ஆகியார் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
