ஈராக் தலைநகர் பக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்டர் தளத்தை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பெரும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான ‘கிறீன் சோன்’ பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்திற்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை அங்கிருந்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது கட்டடச் சேதங்கள் குறித்து பக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடும் பதற்றம் நிலவுகிறது.
