இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், பெஞ்சமின் நேதன்யாகு நலமுடன் உள்ளார் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பெப்ரவரி 28இல் தாக்குதலை தொடங்கின. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை தொடங்கியதுமே ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
தற்போது போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார் என சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பது போல காட்டப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் துருக்கிய செய்தி நிறுவனமான அனடோலு ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில், “நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டார் என்ற சமூக ஊடகக் கூற்றுகள் பொய்யானவை. பிரதமர் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யய்ர் நெதன்யாகுவின் எக்ஸ் கணக்கில் சமீப நாட்களாக பதிவுகள் இல்லாததைக் குறிப்பிட்டு, குடும்ப சோகம் காரணமாகவே அவர் பதிவிடுவதை நிறுத்தியதாக சிலர் தெரிவித்தனர். ”யய்ர் நெதன்யாகு கடைசியாக மார்ச் 9 அன்று பதிவிட்டது உண்மைதான். ஆனால், அதற்காக வதந்திகள் உண்மை ஆகிவிடாது” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
