ஜனாதிபதிக்கும் கட்டார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி, கட்டார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார். தற்போதைய பிராந்திய நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, கட்டார் நாட்டுக்கு இலங்கையின் ஆதரவு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலைமையை விளக்கிய கட்டார் அமீர், இலங்கையர்கள் உட்பட அந்நாட்டில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதாக ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்.

ஹோர்முஸ் சமுத்திர சந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து இரு தலைவர்களும் கவனம் செலுத்தியதுடன், அதன் மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் வலுசக்தி சந்தைகளில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

அதிகரித்து வரும் வலுசக்தி செலவுகளால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைப்பதற்கு, சர்வதேச உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார்.

உலகளாவிய வலுசக்தித் துறையில் கட்டார் நாடு எப்போதும் நம்பகமான பங்காளியாக செயற்படும் என்றும், சவால்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது என்றும் கட்டார் அமீர் மேலும் தெரிவித்தார்.

பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக, பதற்றமான சூழ்நிலையை விரைவாகத் தணிக்க வேண்டும் என்றும், போர் நடவடிக்கைகளுக்குப் பதிலாக பிராந்தியப் பேச்சுவார்த்தைகள் மூலம் இராஜதந்திரத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles