யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்று திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (ஜே/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்துக்கு அருகில் இராணுவ பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 2 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8 ஏக்கர் காணி கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத காலப் பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது.
ஏனைய காணிகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என அப்போது உறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 22 மாதங்களின் பின்னர் 2 ஏக்கர் காணி தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
இன்னமும் தேவாலயத்துக்கு அருகில் உள்ள காணிகள் சில இராணுவக் கட்டுப்பாட்டினுள் காணப்படுகின்றன. அவற்றினையும் விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
