இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக சென்றபோது வைத்தியர் கடமையில் இல்லாமை தொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இளவாலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவன் நேற்று வியாழக்கிழமை திடீர் சுகவீனம் காரணமாக மயங்கி விழுந்த நிலையில், சிகிச்சைக்காக இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு வைத்தியர்கள் கடமையில் இல்லை எனக் கூறி , மாணவனை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாதியர்கள் முதலுதவி அளித்தாவது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வையுங்கள் எனக் கோரியபோதிலும், தாம் சிகிச்சை அளித்தால் தாமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் இல்லாததால் தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் வைத்தியசாலை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மாணவன் ஓட்டோவில் சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் வெளியான செய்திகளின் அடிப்படையில் , விசாரணைகளை ஆரம்பித்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம், இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியிடம் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பவம் தொடர்பில் விளக்கம் தருமாறு கோரியுள்ளது.
