ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு!

சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக வழக்கறிஞர் கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் ‘கொழும்பு டெலிகிராப்’ பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதியிருந்த ரட்ணஜீவன் கூல், போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர்களைக் காப்பாற்றும் நோக்கில் கலாநிதி கு. குருபரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழுவினர், அப்போதைய சிறிலங்காவின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து, குறித்த வழக்கறிஞர்களைக் காப்பாற்றி விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனக் குறிப்பிட்டுக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

அக்கட்டுரையை அடியொற்றி அதன் பின்னர் பல்வேறு செய்திகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், அச்செய்தியானது தமது தொழிலையும், தமது தொழில்சார் நேர்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் நோக்கிலும், தமது தொழிலுக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் முன்வைக்கப்பட்ட அவதூறான குற்றச்சாட்டு என்ற அடிப்படையிலேயே வழக்கறிஞர் குமாரவடிவேல் குருபரன் இந்த வழக்கை முன்னெடுத்துள்ளார்.

தமது வழக்கறிஞர்களான பெனார்சி பிரதீபன் மற்றும் த. தினேஷ் ஆகியோர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் இந்த அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

ரட்ணஜீவன் கூலினுடைய அக்கூற்றுகள் அவதூறானவை எனவும், தமக்கு இதன்மூலம் ஏற்பட்ட இழப்பீடாக 1000 மில்லியன் (100 கோடி) ரூபாயை அவர் செலுத்த வேண்டும் எனக் கோரியுமே வழக்கறிஞர் கு. குருபரனால் இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles