தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுகுழு கனேடிய தூதுவர் இஸபெல்லா மார்டினை சந்தித்து கலந்துரையாடியது.
இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அரசியல் குழு உறுப்பினர்களான, முருகேசு பரணீதரன், பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது-
இறுதி கட்டப் போர் காலத்தில், கொழும்பு தெருக்களில் திரிந்த வெள்ளை வான் கடத்தல்களுக்கு எதிரான எனது போராட்டத்தின் போது, எனக்கு தஞ்சம் தந்த பழைய இல்லம், கொழும்பில் உள்ள கனடா இல்லமாகும்.
எமது கூட்டணியின் நலிவுற்ற மலையக மக்கள் சார்ந்த போராட்டம் தொடர்பில், எடுத்து கூறினோம்.
மலையக தமிழரில், கூலி தொழிலாளர் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே.
ஆகவே மலையக தமிழரின் அனைத்து பிரச்சினைகளையும், தொழிலாளர் பிரச்னையாக சுருக்குவது முறையற்றது.
தொழிலாளர் தொகை ஆக ஒரு இலட்சம் பேர் மட்டுமே.
இன்று இன அடையாளம் கொண்ட 15 இலட்ச சிறுபான்மை தேசிய இனமாக மலையக சமூகம் வளர்ந்துள்ளது.
இன்று முழுமை அற்ற குடியுரிமை; நவீன அடிமைதன அறிகுறிகள்; ஆகிய அடிப்படை கவலைக்குரிய நிலைமைகளில், நமது மக்கள் தோட்ட பிரதேசங்களில் வாழ்கிறார்கள்.
இந்த கருத்துகளை நாம் எடுத்து கூறியதை தூதர் தெளிவாக புரிந்து கொண்டார்.
கனேடிய-உலகளாவிய உதவி கரங்கள், மனித உரிமை கண்காணிப்பு, ஆகியன நலிவுற்ற நமது மக்களையும் அடைய வேண்டும்.
அதை கனடா உறுதி படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
