அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ‘ஆர்டெமிஸ்-2’ திட்டத்தின் ஒரு பகுதியாக 3 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் 53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர்.
இதற்காக எலான் மஸ்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மற்றும் ஜெப் பெசோஸின் ‘புளூ ஆரிஜின்’ போன்ற தனியார் நிறுவனங்களும் நாசாவுடன் கைகோர்த்துள்ளன.
நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் மற்றும் உலகின் சக்திவாய்ந்த ‘எஸ்.எல்.எஸ்’ ரொக்கெட் மூலம் இவர்கள் விண்ணில் ஏவப்பட உள்ளனர்.
நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பூமிக்கு திரும்பும் இந்த 10 நாள் பயணம், மனித குலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத ஆழமான பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்லும்.
கடந்த 1972-ம் ஆண்டு ‘அப்பல்லோ 17’ விண்கலத்திற்கு பிறகு, மனிதர்கள் நிலவில் கால் தடம் பதிக்கவில்லை. தற்போது சுமார் ரூ.7½ இலட்சம் கோடி (93 பில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. வரும் 2028ஆம் ஆண்டு நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்குவதே நாசாவின் இறுதி இலக்காகும்.
விண்வெளி ஆராய்ச்சியில் தனக்கு கடும் போட்டியாளராக உருவெடுத்துள்ள சீனா, 2030-க்குள் நிலவில் மனிதர்களைத் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட இந்த திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது.
வானிலை சாதகமாக இருந்தால் இன்று நிலவு நோக்கிய இந்த பயணம் தொடங்கும். இதனை ஒட்டுமொத்த உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றது.
