ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனாட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. இதோடு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். இரண்டு வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளமாட்டோம். ஹோர்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்’ என சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, தங்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டால் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை உடன் இணைந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
