இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் உள்ளது என லான்செட் ஆய்விதழ் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019 இல் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் 2 மடங்கு பாதிப்பு இருக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.
லான்செட் அறிக்கை 19.6 சதவீத ஆண்களும் 20.1 சதவீத பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
இதில் 46 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதன் விளைவாக, அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மீதம் உள்ளவர்களில் 59 சதவீதம் பேர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் இதய நோய் ஆபத்தும் கொலஸ்டிரால் பாதிப்பை கொண்டுள்ளனர்.
எனவே இந்தியர்களிடையே நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது.
40 வயதைக் கடந்துவிட்டாலே 3 மாதங்களுக்கு ஒருமுறை HbA1c ரத்தப் பரிசோதனை செய்து 3 மாத ரத்த சர்க்கரை அளவின் சராசரியை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
