Colombo (News 1st) தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்புத்துறை வியாபார சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு சாகல ரத்நாயக்க இதன்போது இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கான குழுவொன்றை நியமிப்பதாகவும் சாகல ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
அத்துடன், நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பிலும் நேற்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
You must be logged in to post a comment.