Colombo (News 1st) வவுனியா – வெடுக்குநாறி மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், சிலைகள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறி மலையிலிருந்த திருவுருவச் சிலைகளும் பூஜை பொருட்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பு மன்றில் இன்று சுட்டிக்காட்டியுள்ளது.
விடயங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட சிலைகளை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்களை சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.