Colombo (News 1st) மத்திய அட்லாண்டிக் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுடன் நீர்மூழ்கிக் கப்பலொன்று நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளது.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்ற இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீர்மூழ்கியானது பயணத்தை ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களுக்கு பின்னர் அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன போது கப்பலில் 5 பயணிகள் இருந்ததாகவும் அவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச நிறுவனங்கள், அமெரிக்கா, கனேடிய கடற்படை மற்றும் வணிக ஆழ்கடல் நிறுவனங்களால் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் நியூஃபவுண்ட்லாந்தின் செயின்ட் ஜோன்ஸிலிருந்து தெற்கே 700 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகின்றன.
எனினும் Massachusetts, Boston அருகே காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன 4 நாட்களுக்குத் தேவையான ஒட்சிசன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதஹம்டனிலிருந்து, நியூயோர்க்கிற்கு பயணித்தபோது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியதுடன் 1600 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கிலோமீட்டர் ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தை பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணிப்பதற்காக பயணி ஒருவரிடமிருந்து 250,000 டொலர்கள் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.