Colombo (News 1st) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்கள் சார்பாக இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று(17) இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இரா.சம்பந்தன் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் சுய மரியாதை, அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் இந்திய அரசாங்கத்தினால் கடந்த 40 வருடங்களாக வழங்கப்படும் பங்களிப்பிற்கு இரா.சம்பந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை சமூகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கான சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பிலும் விசேடமாக தென்னிந்தியாவின் மிக நெருங்கிய உறவினர் என்ற வகையிலும் இலங்கையின் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பாதுகாப்பு, சுய அடையாளம் என்பன பிரிக்க முடியாததென தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பின்புலத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கியுள்ள உறுதிமொழிகளை தாமதமின்றி இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
You must be logged in to post a comment.