Colombo (News 1st) அங்கொடை தேசிய மனநல நிலையத்தின் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரையும் சேர்த்து இதுவரை மொத்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கொடை தேசிய மனநல நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதான ஒருவர் கடந்த 25 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.
கொலை தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினாலும், மனநல நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றினாலும் தனித்தனியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நோயாளியின் கொலை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய மனநல நிலையத்தின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.