Colombo (News 1st) நாளை (02) மும்பையில் இந்தியா- இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மோசமடைந்து வரும் காற்றின் தரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, இனிவரும் காலத்தில் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை இடையே போட்டி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்த விடயம் குறித்து ICC-இற்கு அறிவித்துள்ளதாகவும் மும்பை மற்றும் டெல்லி போட்டிகளின் போது காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிக்கப்படாது எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஜெய் ஷா The Indian Express பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட தமது நிறுவனம் உறுதியாக உள்ளது எனவும் ரசிகர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களை பாதுகாப்பதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.