Colombo (News 1st) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசாங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி மற்றுமொரு பாரதூரமான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராகின்றது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலமே (Online Safety Bill) அதுவாகும்.
மக்களின் தகவலறியும் உரிமை மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமை என்பவற்றுக்கு இதன் மூலம் அழுத்தம் ஏற்படுவதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், இந்த சட்டமூலம் திருத்தப்பட வேண்டும் என உலகின் பிரபல இணைய சேவைகளை உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டணி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு அறிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி நீண்ட கடிதமொன்றை அவ்வமைப்பு அமைச்சருக்கு அனுப்பியுள்ளது.
இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஆசிய இணைய கூட்டணி, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அது விரிவாக திருத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு அறிவித்துள்ளது.
உத்தேச சட்டமூலம் தற்போது காணப்படும் விதத்திலேயே அமுல்படுத்தப்பட்டால், பல விளைவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவ்வமைப்பு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டமூலத்தில் தடை செய்யப்பட்ட கருத்து என சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயத்தினூடாக சட்டபூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு இருக்கும் சந்தர்ப்பம் ஓர் குற்றமாக காண்பிக்கப்படும் என ஆசிய இணைய கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து தெரிவிப்பதற்கு இருக்கும் உரிமை இதனூடாக தடுக்கப்படலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமூலத்தில் காணப்படும் சில தவறுகள், தற்போது காணப்படும் சட்டங்களினூடாகவும் தவறு என குறிப்பிடப்பட்டுள்ளதால், மீண்டும் மீண்டும் அதற்கு பொருள் கோடுவது சட்டபூர்வமான பிணக்குகளை ஏற்படுத்தும் என்பது ஆசிய இணைய கூட்டணியின் நிலைப்பாடாகும்.
உண்மைக்கு புறம்பான மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்துகளை குற்றம் என கருதுவது , கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு விடுக்கப்படும் ஓர் தடை எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்டமூலத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள ஆணைக்குழு ஊடாக அரசியல் தலையீடுகளும் அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் சம்பவங்களும் இடம்பெறலாம் என ஆசிய இணையக்கூட்டணி அமைச்சர் டிரான் அலஸூக்கு அறிவித்துள்ளது.
அதிகளவில் வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதனூடாக தற்போது இலங்கையில் கட்டியெழுப்பப்படும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அல்லது முதலீடுகள் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு ஏற்ப மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைய விதிமுறைகளுக்கு ஏற்ப மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
GOOGLE, APPLE, META, X எனப்படும் TWITTER, AMAZON, YAHOO, BOOKING.COM, EXPEDIA GROUP, GO TO, RAKUTEN, LINKEDIN, SPOTIFY , SNAP IN CORPORATED ஆகிய பிரபல நிறுவனங்கள் ஆசிய இணைய கூட்டணியின் உறுப்பினர்களாவர்.
You must be logged in to post a comment.