Colombo (News 1st) பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் குழுவினால் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக தணிக்கை சபையின் முன்னாள் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் திரைப்படவியலாளர் அசோக ஹாதகம, நாடகக் கலைஞர் ராஜித திசாநாயக்க, படைப்பாளர் அனோமா ராஜகருணா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜகத் விக்ரமநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
திரைப்படம், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்து, புதிய சர்வதேச போக்குகள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 1912 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொது அரங்கக்கலை கட்டளைச் சட்டத்தினை ஆராய்ந்து இந்த புதிய சட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இச்சட்டத்தின் ஊடாக கலைப் படைப்புகள் தொடர்பில் எழுந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இச்சட்டத்தின் மூலம் படைப்பு சுதந்திரம் முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் குழுவின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி தெரிவித்துள்ளார்.
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வ உரிமைகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.