அம்பானி, அதானிக்கு நான் ஆதாயம் அளித்தேனா..? தூக்கில் தொங்க கூட ரெடி : கலங்கி சொன்ன மோடி..!

“அம்பானி, அதானி ஆகியோர் என்னால் முறைகேடாக ஆதாயம் அடைந்தார்கள் என நிரூபித்தால், என்னை தூக்கிலிடுங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

“அம்பானி, அதானிக்கு நான் முறைகேடாக எந்த ஆதாயத்தையும் அளிக்கவில்லை. அப்படி யாராவது நிரூபித்துவிட்டால், என்னை தூக்கிலிடுங்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பிரச்சாரம் இந்த முறை தீயாக உள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி மீது அவர் வைக்கும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை யாராலும் மறுக்க முடியாது.

“மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் யாரும் பயன்பெறவில்லை என்று சொல்ல முடியாது. மோடி செய்த நன்மைகளுக்கு அவர்கள் என்றென்றும் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். அவர்கள் வேறு யாருமல்ல.. பரம ஏழைகளான அம்பானியும், அதானியும் தான். இதுபோல தனது பல ஏழை நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம்?” என்று வஞ்சப் புகழ்ச்சி போல மோடியை விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து வருகிறார். எந்த தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும் தான் செயல்படவில்லை என்றும், ஏழைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறேன் எனவும் மோடி பேசி வருகிறார். இந்நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு மோடி இன்று பேட்டி அளித்தார். அப்போது ராகுல் குற்றச்சாட்டு குறித்து நெறியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து மோடி கூறுகையில்,

“இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த காலத்தில், அவர் டாட்டா பிர்லாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இப்போது என்னவென்றால், அந்த நேரு குடும்பம் இப்போது என்னை பார்த்து, நான் அம்பானி, அதானிக்கு ஆதரவானவன் என்று சொல்கிறது. நமது சுதந்திர தினத்தன்று விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்களை எப்படி கவுரவிக்காமல் இருக்க முடியும்? அப்படி செய்தது என் தவறா? ”

அம்பானி, அதானி மட்டுமல்ல.. வேறு யாருக்கும் நான் முறைகேடாக ஆதாயம் வழங்கவில்லை. அப்படி நான் யாருக்காவது ஆதாயம் அளித்ததாக நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன். என்னை தூக்கிலிடுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன். அதே சமயத்தில், இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய தொழிலதிபர்களை நான் மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணமும், தொழிலாளர்களின் உழைப்பும் தேவைப்படுகிறது. முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை புறக்கணிப்பது நாட்டிற்கு நல்லது கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles