ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தலங்கள் மீதும் பொலிஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 பொலிஸார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
நேற்று அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்
தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தப்பிச் செல்லும்போது பொலிஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கராவதிகளில் 5 பேரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னாள் ரஷ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.